அட்டனில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரி பலி – 6 பேர் காயம்.

0
224

அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (05.06.2021) காலை 7.30 அளவில் இடம்பெற்ற விபத்தில் அட்டன் பொலிஸ் நிலைய சிறு மற்றும் பாரிய குற்றப் பிரிவுக்கு பொறுப்பான உப பொலிஸ் பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளார்.

அட்டனில் இருந்து கண்டி இராணுவ முகாமில் ஒப்படைப்பதற்காக கொரோனா சடலம் கொண்டுச் சென்ற வாகனத்திற்கு பாதுகாப்பு வழங்க சென்ற 57 வயதான எஸ்.பெனடிக் என்ற பொலிஸ் அதிகாரியே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த கொரோனா சடலம் ஓட்டமாவடியில் அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்படவுள்ளன.

உப பொலிஸ் பொறுப்பதிகாரி பயணம் செய்த வாகனம் வட்டவளை கரோலினா தோட்ட பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் உப பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் 3 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வாகன சாரதி, சடலத்தின் உறவினர்கள் இருவர் ஆகியோர் காயமடைந்த நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் கேகாலை பிரதேசத்தை சேர்ந்தவர் என அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீதியில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக உப பொலிஸ் பொறுப்பதிகாரி பயணித்த வாகனம் வலுக்கி வீதியை விட்டு விலகி பள்ளளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் அட்டன் மற்றும் வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here