அரசுக்கு சொந்தமான தோட்டங்களில் கடந்த 20 வருடங்களாக தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்காது நிலுவையில் உள்ள ஈ.டி.எப்., ஈ.பி.எப் உட்பட ஏனைய சட்ட ரீதியான நிலுவைகளை பெற்றுக்கொடுக்குமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் அதற்கான நடவடிக்கைகள் பிரதமர் மேற்கொண்டுள்ளார்.
மொனராகலை, கண்டி, மாத்தளை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் கடந்த 20 ஆண்டுகளாக அரசுக்கு சொந்தமான தோட்டங்களில் பணிபுரிந்த சுமார் 10,000 தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஈ.டி.எப்., ஈ.பி.எப (EPF,ETP) மற்றும் பிற சட்டரீதியான நிலுவைகள் வழங்கப்படாதுள்ளது. இதுதொடர்பான தகவல்களை மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் மதியுகராஜா, செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுவந்தத்தை தொடர்ந்து, செந்தில் தொண்டமான் இந்த விடயத்தை பிரதமரின் கவனத்துககு கொண்டுசென்றுள்ளார்.
அலரி மாளிகையில் பிரதமருடன் இதுதொடர்பிலான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது, செந்தில் தொண்டமான் உரிய ஆவணங்களை பிரதமரின் கவனத்துக்கு கொண்டுவந்ததை தொடர்ந்து, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளை உடனடியாக இவ்விடயத்தில் கவனம் செலுத்துமாறும் குறித்த நிலுவைகளை வழங்கு முன்னுரிமை அடிப்படையில் ஏற்பாடுகளை செய்யுமாறு; அறிவுறுத்தியுள்ளார்.
நீண்டகாலமாக பல அரசியல்வாதிகள் இந்த விவகாரத்தில் தலையீட்டை மேற்கொண்டும் எவராலும் உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாது போயுள்ள நிலையில் செந்தில் தொண்டமானின் தலையீட்டால் 10000 தொழிலாளர்களுக்கு தற்போது தீர்வு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.