இலங்கையிலிருந்து உக்ரைன் நாட்டுக்கு இடிதாங்கிகளை விற்பணை செய்து தலா ஒருவருக்கு நூறு கோடி பணம் தருவதாக கூறி ஒருகோடியே 33 லட்சத்து 60 ஆயிரம் (1,33,60,000) ரூபாவை மோசடி செய்த ஒன்பது பேர் அடங்கிய குழுவினரை இம்மாதம் (25) ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க நுவரெலியா மாவட்ட நீதவான்
டி.ஜீ பிரதீப ஜயசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நுவரெலியா பொலிஸ் தலைமையக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்தி யூ உடுகமசூரியவுக்கு கிடைத்த தகவலுக்கமைய ஐ.பி.அபேசிங்க,மற்றும் ஐ.பி.ஹடிடியாராச்சி தலைமையில் நியமிக்கப்பட்ட பொலிசார் குறித்த ஒன்பது சந்தேக நபர்களையும் நுவரெலியாவில் உல்லாச விடுதி,பஸ்தரிப்பு நிலையம் உள்ளிட்ட வெவ்வேறு இடங்களில் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட ஒன்பது சந்தேக நபர்களையும் நுவரெலியா குற்றத்தடுப்பு பொலிசார் திங்கட்கிழமை மாலை நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் டி.ஜீ பிரதீப ஜயசிங்க முன்னையில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது வழக்கு விசாரணையை எடுத்துக்கொண்ட நீதவான் சந்தேகநபர்களை எதிர்வரும் (25) திகதி திங்கட்கிழமை வரை 14 நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த கைது நடவடிக்கை ஞாயிற்றுகிழமை (10) மாலை முதல் இடம்பெற்றதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்தி.யு.உடுகமசூரிய (11) அன்று ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் (11) மாலை சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டி,சந்ரு