அமரர். செளமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தினூடாக சௌபாக்கிய தெக்ம வேலைத்திட்டத்தின் கீழ் நேற்று (30) தலவாக்கலை நகரில் “சாலையோரம் உணவகம்” ஒன்றிற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இவ்வேலைத்திட்டத்திற்கான முதற்கட்டமாக 6 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தலவாக்கலை லிந்துலை நகரசபை தலைவர் லெட்சுமன் பாரதிதாசன் தெரிவித்தார்.
அரசாங்கம் 100 அலங்கார நகர நிர்மாணத்திற்கு அமைய தலவாக்கலை நகரமும் இத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமையின் காரணமாகவே திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர சபை தவிசாளர் தெரிவித்தார்.
அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை விந்துலை நகரசபை கட்டிடத்திற்கு முன்பாக இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
இங்கு முற்றிலும் சத்துள்ள ஆரோக்கியமான பாரம்பரிய உணவு வகைகளை உடனுக்குடன் தயாரித்து வழங்கக் கூடியவாறான வகையில் சாலையோரம் உணவகம் அமைக்கப்படவுள்ளது.
தலவாக்கலை – லிந்துலை நகரசபை தலைவர் லெட்சுமன் பாரதிதாசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் அதிகாரிகள், நகர சபை உறுப்பினர்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி செயலாளர் அர்ஜீன் ஜெயராஜ், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது இந்த அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுப்பதற்காக நிதி வழங்கிய இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களுக்கு நகரசபை தலைவர் பாரதிதாசன் நன்றி கூறியதோடு இத் திட்டம் தொடர்பாகவும் அபிவிருத்திப்பணிகள் தொடர்பாக கருத்து வழங்கினார்.
(க.கிஷாந்தன்)