பாடசாலையிலிருந்து இடைவிலகாது மாணவர்கள் தொடர்ச்சியான கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து பெறப்பட்ட ஒரு தொகை நிறப்பூச்சுகளை பொகவந்தலாவ தெரேசியா தமிழ் வித்தியாலயத்துக்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தெரேசியா தமிழ் வித்தியாலயத்தின் பிரதி அதிபர் பூபாலன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரத்தின் பிரத்தியேக செயலாளர் சுப்பையா கமல்தாசன் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
சோ. ஸ்ரீதரன் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது:
பெருந்தோட்டப் பகுதி பெற்றோர்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியிலும் தமது பிள்ளைகளுக்கு கல்வியைப் பெற்றுக் கொடுப்பதில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனை மனதில் கொண்டு மாணவர்கள் கல்வி கற்பதில் அக்கறை செலுத்த வேண்டும்.
கொரோனா முடக்க காலத்தில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைந்தன. தற்போது நிலைமை சீரடைந்து வருகின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் மாணவர்கள் கல்வி கற்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
மலையகப் பகுதிகளில் மாணவர் இடைவிலகல் அதிகமாக காணப்படுகின்றது.
தரம் 5 வரை உள்ள பாடசாலைகளிலிருந்து தரம் 6 முதல் வகுப்புகள் கொண்ட பாடசாலைகளுக்குச் செல்லும்போதும் சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளுக்குப்பிறகு உயர்தர வகுப்புகளுக்குச் செல்லும் போதும் மாணவர் இடைவிலகல்கள் ஏற்படுகின்றன.
இந்த இடைவிலகலுக்கான காரணங்களை அறிந்து அதனை தடுப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். தெரேசியா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 11 வரை வகுப்புகள் உள்ளதால் இந்தப் பாடசாலையில் மாணவர் இடைவிலகல் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றேன்.
இந்தப் பாடசாலையில் வளப்பற்றாக்குறை அதிகமாக உள்ளன. இவற்றை தீர்ப்பதற்கு பாடசாலை சமூகம் முன்வர வேண்டும்.
மக்கள் பிரதிநிதிகளிடம் பாடசாலை சமூகம் பாடசாலைக்கு தேவையான உதவிகளை பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் கடந்த காலங்களில் இந்தப் பாடசாலைக்கு பல உதவிகளை நாங்கள் செய்திருக்கின்றோம்.
ஆகவே எதிர்காலத்திலும் உதவிகள் செய்வதற்கு காத்திருக்கிறோம்.
எனவே மாணவர்கள் தமது எதிர்காலத்தை வளப்படுத்திக் கொள்வதற்கு கல்வி கற்பதில் பெரிதும் அக்கறை செலுத்த வேண்டும்.



