அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் அமுலில் இருக்கும்வரை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்தக்கூடாது – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
அத்துடன், 19 ஐ அடியொட்டியதாக முன்வைக்கப்படும் 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தான் ஆதரிக்க போவதில்லை எனவும் அவர் அறிவித்தார்.
” புதிய அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தவே ஜனாதிபதிக்கு மக்கள் ஆணை வழங்கினர். இது தொடர்பில் நிபுணர்கள் குழுவின் அறிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 21 தேவையற்றதொன்றாகும்.” – என்று நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர சுட்டிக்காட்டினார்.
” இலங்கையில் 52 வீதமான தமிழ் மக்கள், சிங்களவர்கள் மத்தியில்தான் வாழ்கின்றனர். எனவே, சிங்கள மக்களுக்கும் தாம் விரும்பிய இடத்தில் வாழும் உரிமை உள்ளது. எனினும், முடியாது எனக்கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனவாதம் பரப்புகின்றனர். இதனை அனுமதிக்க முடியாது.” – எனவும் அவர் இடித்துரைத்தார்.




