மத்திய கிழக்கை பதற்றத்தில் தள்ளியிருக்கும் ஈரான் – இஸ்ரேல் மோதல்!

0
7

ஈரான் மீது இன்று அதிகாலையில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணுஆயுத தயாரிப்பை முடக்கும் நோக்கத்தில் யுரேனியம் செறிவூட்டல் மையத்தின் மீது இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி அதிரடி தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடியாக ஈரான் ட்ரோன் தாக்குதலை தொடங்கி உள்ளது. இருநாடுகள் இடையே கடும் மோதல் வெடித்துள்ள நிலையில் ஜோர்டான், ஈராக் நாடுகள் பதற்றமாகி உள்ளன.

தனது வான்பரப்பில் பறக்கும் ஏவுகணை, ட்ரோன்களை ஜோர்டான் இடைமறிப்பதால் போர் வெடிக்கும்அச்சம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் நீண்ட காலமாக மோதல் உள்ளது. பாலஸ்தீனத்தின் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பு, லெபனானில் இயங்கும் ஹெஸ்புல்லா அமைப்பு, ஓமனில் இருக்கும் ஹவுதி அமைப்பு உள்ளிட்டவற்றிற்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.

இந்த அமைப்பினர் இஸ்ரேலை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். காசாவில், ஹமாஸ்க்கு எதிராக தற்போது போர் நடந்து வருகிறது. இதற்கு ஈரான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதலை வலுவாக்கி உள்ளது. கடந்த ஆண்டு ஈரான் தனது ஏவுகணை மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தது. இஸ்ரேலின் 100க்கும் அதிகமான போர் விமானங்கள் ஈரானுக்குள் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இருநாடுகள் இடையே மோதல் இருந்தாலும் தாக்குதல் நடைபெறவில்லை.

இதற்கிடையே தான் இன்று ஈரான் மீது இஸ்ரேல் திடீரென்று ஏவுகணைகளை கொண்டு தாக்கியது. ஈரானின் அணுசக்தி திட்டங்களின் உள்கட்டமைப்பு மற்றும் ராணுவதளங்களை இஸ்ரேல் குறிவைத்து அடித்தது.

தற்போது இஸ்ரேலுக்கு, ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. ஈரான் பல நூறு ட்ரோன்களை இஸ்ரேல் நோக்கி அனுப்பி வருகிறது. இருநாடுகள் இடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையே தான் இஸ்ரேல் – ஈரான் மோதலுக்கு நடுவே சிக்கி அப்பாவியான ஜோர்டான், ஈராக் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது.

அதாவது இஸ்ரேலும், ஈரானும் நேரடியாக எல்லைகளை பகிர்ந்து கொள்ளவில்லை. இருநாடுகள் இடையேயான தொலைவு 2,315 கிலோமீட்டராக உள்ளது. இந்த இருநாடுகள் இடையே ஜோர்டான் மற்றும் ஈராக் ஆகியவை உள்ளன. ஈரானும், இஸ்ரேலும் போர் விமானங்கள், ட்ரோன், ஏவுகணைகளை தாக்குதலுக்கு பயன்படுத்தினால் அவை ஜோர்டான், ஈராக் வான் எல்லைகளை கடந்து தான் செல்ல வேண்டும்.

இன்று அதிகாலையில் இஸ்ரேல் அனுப்பிய ஏவுகணைகள் மற்றும் ஈரான் பதிலுக்கு அனுப்பிய ட்ரோன்கள் ஜோர்டான், ஈராக் வான்வெளி பரப்பில் பறந்துள்ளன. இதனால் இஸ்ரேல் – ஈரான் மோதலில் ஜோர்டான், ஈராக்கிலும் பதற்றம் நிலவி வருகிறது.இதுபற்றி ஜோர்டான் ராணுவம் தரப்பில்,

‛‛இன்று காலையில் எங்களின் வான்வெளி பரப்பில பறந்த ட்ரோன்கள், ஏவுகணைகளை நாங்கள் வைத்திருக்கும் வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம் இடைமறித்தது. ராயல் போர் விமானம் மற்றும் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள் தான் ட்ரோன், ஏவுகணைகளை இடைமறித்தது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இஸ்ரேலின் ஏவுகணை, ஈரானின் ட்ரோன்களை ஜோர்டான் இடைமறித்து அழித்து வருவது உறுதியாகி உள்ளது. இந்த ஏவுகணை, ட்ரோன்கள் அனுமதியின்றி தங்களின் நாட்டு வான்எல்லையில் பரப்பதாலும், தங்களின் நாட்டின் மீது விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் ஏவுகணை, ட்ரோன்களை ஜோர்டான் இடைமறித்து வருகிறது.

மேலும் இந்த ட்ரோன், ஏவுகணைகள் எந்த நாட்டுக்கு சொந்தமானது என்பதை ஜோர்டான் உறுதி செய்யவில்லை.

அதேபோல் ஈராக்கின் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், ‛‛100க்கும் அதிகமான ட்ரோன்கள் எங்களின் வான்வெளி பரப்பில் பறந்தன. இந்த ட்ரோன்கள் ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி அனுப்பபட்டவையாகும்” என்று தெரிவித்துள்ளனர். இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இஸ்ரேல் ஏற்கனவே காசா மீது போர் தொடுத்து வரும் நிலையில் இப்போது அந்த நாட்டுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது. இதனால் இன்னொரு போர் வருகிறதா? என்ற அச்சம் உருவாகி உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here