நாட்டின் பல பகுதிகளில் சம்பவித்த நான்கு வீதி விபத்துகளில் ஒரு இளைஞன் மற்றும் ஒரு பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
மதவாச்சி, மதுரகொட, ஹோமாகம மற்றும் வெல்லவாய பொலிஸ் பிரிவுகளில் இந்த விபத்துகள் நேற்றையதினம் பதிவாகியுள்ளன.
குருணாகல்-மாத்தளை வீதியில் உள்ள கஹடகஹமுல பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்த நிலையில் அதே திசையில் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தொடம்கஸ்லந்த பகுதியில் வசிக்கும் 25 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதற்கிடையில், மதவாச்சியிலிருந்து ரம்பேவ நோக்கி பயணித்த தனியார் பேருந்து, மதவாச்சி பிரிவிற்குட்பட்ட ஏ-09 வீதியில் வெலிஓய சந்திக்கு அருகில் அதே திசையில் பயணித்த லொரியுடன் மோதியுள்ளது.
விபத்தில் லொரி வீதியில் கவிழ்ந்து, அதிலிருந்த 08 பேர் காயமடைந்து, ரம்பேவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஹல்மில்லேவ பகுதியில் வசிக்கும் 52 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், ஹோமாகம பொலிஸ் பிரிவில் உள்ள கொட்டாவ-ஹோமாகம சாலையில் கொட்டாவயிலிருந்து ஹோமாகம நோக்கிச் சென்ற கார், பாதசாரி ஒருவர் மீது மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஹிரிபிட்டியவைச் சேர்ந்த 75 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, வெல்லவாய பொலிஸ் பிரிவில் உள்ள வெல்லவாய-தனமல்வில வீதியில் உள்ள அரியசிறி சந்தியில், அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது லொரி மோதியதில் 78 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.