இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் போட்டிகள் சில இலங்கையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ணத் தொடர் இந்தியாவில் செப்டம்பர் 30 தொடக்கம் நவம்பர் 02 வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் அண்மையில் இந்தியா – பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இடையில் ஏற்பட்ட போர் முறுகலினால் மகளிர் உலகக் கிண்ணத் தொடரின் போட்டிகள் சில குறிப்பாக பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் அனைத்தும் இலங்கைக்கு மாற்றப்பட்டுள்ளது.
அந்தவகையில் தொடரின் முதல் போட்டி இலங்கை – இந்தியா ஆகிய நாடுகள் இடையில் செப்டம்பர் 30ஆம் திகதி இந்தியாவின் பெங்களூரு சின்னசுவாமி அரங்கில் நடைபெறுகின்றது. அதன் பின்னர் இந்தியா தமது இரண்டாவது போட்டியில் ஒக்டோபர் மாதம் 05ஆம் திகதி பாகிஸ்தானை கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் வைத்து எதிர் கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அதேநேரம் பாகிஸ்தான் மகளிர் உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதி அல்லது இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட போட்டிகளும் கொழும்பில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அவ்வாறான ஒரு நிலை இல்லாத போது தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி (ஒக்டோபர் 29) குவஹாத்தி நகரிலும், இறுதிப் போட்டி (நவம்பர் 02) பெங்களூரிலும் இடம்பெறவிருக்கின்றது.
மகளிர் ஒருநாள்உலகக் கிண்ணத் தொடரில் 28 லீக் போட்டிகளுடன் அரையிறுதி, இறுதிப் போட்டிகள் அடங்கலாக மொத்தம் 31 போட்டிகள் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.