நேபாள பெடரல் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் பத்ம பிரசாத் பாண்டே தலைமையிலான நேபாள பாராளுமன்ற தூதுக் குழுவினர் அண்மையில் (16) இலங்கை பாராளுமன்றத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்தனர். இச்சந்திப்பில் இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.
ஐந்து நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள நேபாள பாராளுமன்ற தூதுக் குழுவில், நேபாள பெடரல் பாராளுமன்ற செயலகத்தின் செயலாளரான கலாநிதி ரோஜ்நாத் பாண்டே, இணைச் செயலாளர் லக்ஷ்மி பிரசாத் கௌதம், உதவி செயலாளர்களான போஜ்ராஜ் சர்மா பௌடெல் மற்றும் திருமதி ரேகா உபாத்யயா கானல் ஆகியோர் அடங்கியுள்ளனர். இக்குழுவினரை பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன மற்றும் பிரதிப் படைக்கல சேவிதர் அசிந்த குரே ஆகியோர் பாராளுமன்ற வளாகத்தில் வரவேற்றனர்.
சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவுடன் நடைபெற்ற சந்திப்பின்போது, சட்டவாக்க செயன்முறை, பாராளுமன்ற நடைமுறைகள் மற்றும் இருநாடுகளின் ஆட்சி முறைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. தற்பொழுது இலங்கை பாராளுமன்றத்தில் நல்லாட்சியை வலுப்படுத்தல், ஊழல் எதிர்ப்பு முறைகளை வலுப்படுத்தல் மற்றும் ஜனநாயகத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு பல முக்கியமான சட்டங்கள் கொண்டுவரப்படுவதாக சபாநாயகர் இதன்போது தெரிவித்தார்.
மேலும் நீதித்துறையை டிஜிட்டல் மயமாக்கல், தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்தல் மற்றும் இலங்கை பாராளுமன்றத்தில் சட்டப் பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். தான் மருத்துவதுத்துறை பணிப்பாளராக இருந்த போது நேபாளத்திற்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பில் நினைவுகூர்ந்த சபாநாயகர் அந்நாட்டின் இயற்கை அழகும் பண்பாட்டு செழிப்பும் மனதில் பதிந்திருப்பதாகத் தெரிவித்தார்.
தூதுக்குழுவிற்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு நேபாள பெடரல் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் பத்ம பிரசாத் பாண்டே, கௌரவ சபாநாயகருக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இச்சந்திப்பு, இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கு இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைபை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான சந்தர்ப்பமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், இலங்கை பாராளுமன்ற தூதுக்குழுவினருக்கு நேபாளத்திற்கான விஜயம் மேற்கொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.
அத்துடன், இந்தக் தூதுக்குழுவினர் கடந்த 17 ஆம் திகதி கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களை சந்தித்ததுடன், இரு நாடுகளினதும் கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில்துறை ஆகிய துறைகள் குறித்து இதன்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் மேலும் கவனம் செலுத்தப்பட்டது.
நேபாள தூதுக்குழுவினர் கடந்த 16ஆம் திகதி பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவை சந்தித்துக் கலந்துரையாடினர். இலங்கையின் அரசியலமைப்பு, பாராளுமன்ற கட்டமைப்பு, குழுக்களின் கட்டமைப்பு மற்றும் பொதுமக்கள் தொடர்பு செயற்பாடுகள் குறித்த மேற்பார்வையை வழங்கும் வகையில் இலங்கை பாராளுமன்ற முறைமை தொடர்பில் விளக்க உரையை அவர் வழங்கினார். அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களும் பணியாளர்களுக்கும் தமது திறன்களை மேம்படுத்தும் வகையில் ‘பாராளுமன்றப் பயிற்சி நிறுவனம்’ ஒன்றை நிறுவும் திட்டம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், நேபாள தூதுக்குழுவினர் கடந்த 16ஆம் திகதி பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்னவை சந்தித்து, பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அலுவலகத்தை ஸ்தாபிக்கும் பணிகள் தொடர்பாக கலந்துரையாடினர். இதன்போது பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கு தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் செயன்முறைகள் தொடர்பிலும் பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அலுவலகத்தின் கடமைகள் மற்றும் செயற்பாடுகள் பற்றிய விரிவான விளக்கத்தையும் அவர் வழங்கினார்.
மேலும், சட்டவாக்க சேவைகள் திணைக்களத்தின் அதிகாரிகளுடனும் நேபாள தூதுக்குழுவினர் கலந்துரையாடினர். இக்கலந்துரையாடலில், சட்டவாக்க சேவைகள் பணிப்பாளர் மற்றும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளர் எம். ஜயலத் பெரேரா மற்றும் சட்டமூல அலுவலகம், சபை ஆவண அலுவலகம் மற்றும் குழு அலுவலக அதிகாரிகள் கலந்துகொண்டதுடன், விசேடமாக சட்டவாக்க செயன்முறை மற்றும் குழு முறைமை தொடர்பில் அவர்கள் தமது அறிவு மற்றும் அனுபவங்களை தூதுக்குழுவினருடன் பகிர்ந்துகொண்டனர்.
அத்துடன், நேபாள தூதுக்குழுவினர் பாராளுமன்ற கட்டடத்தொகுதியைப் பார்வையிட்டதுடன், சபாநாயகரின் கலரியிலிருந்து பாராளுமன்ற அமர்வையும் பார்வையிட்டனர். மேலும், 17 ஆம் திகதி இடம்பெற்ற பத்தாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை – நேபாள பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீளஸ்தாபிப்பதற்கான கூட்டத்திலும் தூதுக்குழுவினர் கலந்துகொண்டனர்.