கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக இனம், மொழி, சாதி, கட்சி பேதங்கள் கடந்து அனைவரும் ஓர் அணியில் இணைந்து பணியாற்ற வேண்டும் என கொத்தமலை பிரதேச சபையின் சர்வஜன அதிகாரம் கட்சியின் உறுப்பினரும், அக்கட்சியின் நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான தசி கணேஷன் அழைப்பு விடுத்துள்ளார்.
கொத்தமலை பிரதேச சபையின் கன்னி அமர்வில் உரையாற்றிய போதே அவர் இந்த அழைப்பை விடுத்தார்.
‘‘நான் இந்த இடத்திக்கு வருவதற்கு ஆரம்பம் முதல் இன்றுவரை எனக்கு வாய்ப்பு கொடுத்த மற்றும் உதவிய அத்தனை சொந்தங்களுக்கும் நன்றிகள்.
நான் இங்குவர பிரதானமான காரணம் சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலீத் ஜெயவீரவாகும். அவருக்கும் இத்தருணத்தில் நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். எனது தாய், தந்தை, வட்டார மக்கள், இளைஞர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சமூக நலன் விரும்பிகள், அரச உத்தியோகஸ்தர்கள் எனஅனைவருக்கும் நன்றிகள்.
இங்கு எதிர்க்கட்சி கிடையாது. கட்சி, இனம், மதம், மொழி மற்றும் சாதி அடிப்படையில் இல்லாமல் அனைவருக்கும் சமமாக வேலை செய்ய வேண்டும்.
கொத்மலை தொகுதியில் கல்வி, சுகாதாரம், விளையாட்டு மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை இனங்கண்டு, ஆராய்ந்து ஜனாதிபதி, பிரதமர் விடயம் சம்பந்தபட்ட அமைச்சு, நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள், நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், NGO க்கள், சமூக அக்கரை கொண்டவர்கள் என அனைவரின் கவனத்துக்கும் கொண்டு தீர்வை பெற்றுக்கொடுக்க முயற்சிப்போம்.
சபையில் அனைவரும் மக்கள் நலனுக்காக ஒற்றுமையாக கை கோர்த்து செயல்படுவோம்.‘‘ என அழைப்பு விடுத்தார்.