எம்.பியின் மகனுக்கு விளக்கமறியல்; மற்றுமொரு அரசியல் புள்ளியும் தொடர்பு

0
14

பாணந்துறை வாலான குற்றவியல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மத்துகம நீதவான் ரசிக விதானவை எதிர்வரும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்..

சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட வாகனத்தை வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அவர் மத்துகமவில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

போலி தரவுகளைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட ஜீப் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வாலான குற்றவியல் தடுப்புப் பிரிவு சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு விசாரணையைத் தொடங்கியது.

இந்நிலையில் மத்துகமவில் குறித்த வாகனம் காணப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அதிகாரிகள் நேற்று மதியம் அந்தப் பகுதியில் சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது, ஜீப்பை செலுத்திய நபர் வாகனத்துடன் கைது செய்யப்பட்டார்.

பின்னர், மத்துகம பொலிஸாரிடம் அவர் (ரசிக விதான) ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஜீப் சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மோட்டார் போக்குவரத்துத் துறையில் பதிவு செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மோட்டார் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த ஒருவர் வாகனத்தைப் பதிவு செய்ய உதவியிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

பொலிஸாரின் விசாரணைகளில், குறித்த ஜீப் ஜகத் விதானவுக்குச் சொந்தமான ஒரு தனியார் நிறுவனத்தின் பெயரில் இரண்டாவது முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மகன் அதைப் பயன்படுத்தி வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

விசாரணையின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரோஷெல் மெலனி அபேகுணவர்தனவிடமிருந்து ஜீப்பை வாங்கியதாக ரசிக விதான கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து, நேற்று (19) களுத்துறை, நாகொடவில் உள்ள ரோஷெல் மெலனி அபேகுணவர்தனவின் வீட்டிற்கு பொலிஸார் சென்றபோது, அவரும் அவரது கணவரும் அப்போது அங்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here