ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமநாயக்கவின் உத்தியோகபூர்வ கார், பெலவத்த-அகுரேகொட சாலையில் உள்ள விமானப்படை தளத்திற்கு அருகில் ஒரு மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து கடந்த 2 ஆம் திகதி இடம்பெற்றுள்ள நிலையில், எந்தவொரு ஊடகத்திலோ அல்லது சமூக வலைத்தளங்களிலோ வெளிவராமல் மூடி மறைக்கப்பட்டுள்ளதாக சகோதரமொழி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது,
குறித்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் 2 மற்றும் 6 வயதுடைய இரண்டு குழந்தைகள் விபத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் தாயும் இரண்டு குழந்தைகளும் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
விபத்து நடந்த நேரத்தில் ஜனாதிபதியின் செயலாளரின் மனைவியும் சாரதியும் காரில் இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சாரதி தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
குறித்த சாரதி, கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டார், மேலும் விபத்தில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு 35,000 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது,