நுவரெலியா – ராகலை பிரதான வீதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் திடீர் பணிப்பகிஷ்கரிப்பில் இன்று வியாழக்கிழமை (14) காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.
நுவரெலியா – ராகலை தனியார் பஸ் சாரதிக்கும் நுவரெலியா – கந்தப்பளை தனியார் பஸ் சாரதிகளுக்குமிடையே நேற்று புதன்கிழமை (13) மாலை கந்தப்பளை மற்றும் நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்திலும் இரு குழுக்களுக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக இரு தரப்புக்கும் இடையில் நேர அட்டவணை மற்றும் வழி அனுமதி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முரண்பாடுகள் நீண்ட காலமாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதனை நிவர்த்தி செய்ய வேண்டும் எனக் கோரியே நுவரெலியா – ராகலை பிரதான வீதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினையும் நுவரெலியா – ராகலை வீதியில் இயங்கும் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் செய்துள்ளனர்.
அதேவேளை திடீரென இன்றைய தினம் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமையால் பொதுமக்கள் பலரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.