கடமையில் இருந்த பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் மீது வர்த்தகர் ஒருவர் அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (26) முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர் மீது வர்த்தகர் ஒருவரினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை (23) குறித்த வர்த்தகருக்கு சொந்தமான வர்த்தக நிலையத்தில் பழுதடைந்த பழங்கள் மற்றும் மனிதபாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் பொதுச் சகாதார பரிசோதகர்களினால் கைப்பற்றப்பட்டு குறித்த வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், குறித்த வர்த்தக நிலையத்திற்கு முன்னால் மேற்படி பொது சுகாதார பரிசோதகர் சென்று கொண்டிருந்த நிலையில் குறித்த பொதுச் சுகாதார பரிசோதகரை அச்சுறுத்தியதுடன் தனது சீருடைகளை களைவதாகவும் ஒரு வாரத்திற்குள் வேலையில் இருந்து இடைநிறுத்துவதாகவும் அச்சுறுத்தியுள்ளதாக குறித்த பொது சுகாதார பரிசோதகர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டை அடிப்படையாக கொண்டு காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.