அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் முன்னர் அறிவித்தபடி, நாளை முதல் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 25% வரி விதிப்பதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனால், ஏற்கனவே உள்ள 25% வரியுடன் சேர்த்து இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்படும் மொத்த வரி 50% ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை மூலமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வரிவிதிப்பு, நாளை(ஓகஸ்ட் 27) அதிகாலை 12:01 மணி முதல் அமலுக்கு வரும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, ரத்தினம், நகைகள், ஜவுளி, ஆடைகள், இறால் போன்ற இந்தியாவின் முக்கிய ஏற்றுமதித் துறைகளை கடுமையாகப் பாதிக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.
ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்வனவு செய்து உக்ரேன் போரை ஊக்குவிப்பதாக குற்றம்சாட்டி கடந்த ஓகஸ்ட் 6 ஆம் திகதி அன்று இந்திய பொருட்கள் மீது அபராதமாக 25 சதவீத வரியை அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் விதித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.