உக்ரைனின் மிகப் பெரிய கடற்படைக் கப்பலை, ட்ரோன் தாக்குதலின் மூலம் மூழ்கடித்ததாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்ய கடற்படையின் ட்ரோன் தாக்குதலின் மூலம், உக்ரைனின் மிகப் பெரிய கடற்படைக் கப்பலான சிம்ஃபெர்போல் தகர்க்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டதாக, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து, அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்,
உக்ரைனின் ஒடெசா பகுதியில் அமைந்துள்ள டானூப் நதியின் டெல்டா பகுதியில் இந்தத் தாக்குதல் நடைபெற்றதாகவும், இதுதான் ரஷ்ய கடற்படை ட்ரோன்களின் முதல் வெற்றிகரமான தாக்குதல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலை, உக்ரைனின் கடற்படை செய்தித்தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.
மேலும், இதில் பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், ஏராளமானோர் படுகாயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் உக்ரைன் கடற்படையில் இணைக்கப்பட்ட கப்பல்களில் சிம்ஃபெர்போல்தான், மிகப் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.