நீர்த்தேக்கம் அமைந்துள்ள பகுதிகளுக்குள் உள்ள மக்களின் குடியிருப்புககளை அகற்றுவது குறித்து அறிவிப்புகளை வெளியிட்டமை தொடர்பில் அமைச்சர் வசந்த சமரசிங்க நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளை விமர்சித்துள்ளார். அவர்கள் அரசாங்க முடிவுகளுக்கு புறம்பாக செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
அமைச்சரின் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை (19) நடைபெற்ற அனுராதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விடயம் பேசப்பட்டது.
“இந்த விடயம் தொடர்பாக மறுபரிசீலனை செய்ய ஒரு விசேட குழு அமைக்கப்பட்டுள்ளதாக நாம் தெரிவித்தோம். மக்கள் இது தொடர்பான முறையீடுகளைச் சமர்ப்பிக்கலாம், மேலும் குழு தேவையான முடிவுகளை எடுக்கும்.
ஆனால், நீர்ப்பாசனத் துறை தாமாக கமக்களின் குடியிருப்புக்களை அகற்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. நீர்த்டேக்க பகுதியின் எல்லைகளைக் குறிக்கவும், ஒரு குழுவை அமைக்கவும் மட்டுமே முடிவு செய்யப்பட்டது. குடியிருப்பை அகற்ற உத்தரவிட்டது யார்? இது ஒரு தீவிரமான பிரச்சினை,” என்று சமரசிங்க மேலும் கடிந்துள்ளார்.
அரசாங்கம் அத்தகைய எந்த நடவடிக்கையையும் அங்கீகரிக்கவில்லை என்றும், அதிகாரிகள் நிர்வாகத்திற்கு எதிராக தேவையற்ற குற்றச்சாட்டுகளை உருவாக்குகிறார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.
அத்துடன் “சட்டவிரோத ஹோட்டல்கள் கட்டப்பட்டு இத்தனை ஆண்டுகளாக எல்லைகள் ஏன் குறிக்கப்படவில்லை? என கேள்வி எழுப்பிய அவர், மக்களை ஆதரிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளைத் தடுக்க வேண்டாம் என்று நான் அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கிறேன்,” என்று மேலும் கூறினார்.




