விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை தேடி மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள புளியடி மாடு காயங்குடா பகுதியில் தனியார் காணி பகுதியில் நீதிமன்ற உத்தரவு பெற்று அகழ்வு பணியை விசேட அதிரடிப்படையினர் திங்கட்கிழமை (29) அன்று முன்னெடுத்தனர்.
கல்லடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் கந்த குட்டி ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான காணியில் கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் முகம் இருந்துள்ளது.
அந்த காலப்பகுதியில் நிலத்தில் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை புதைத்து மறைத்து வைத்துள்ளதாகவும் அதனை அகழ்ந்து எடுப்பதற்காகவும் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற உத்தரவு பெற்று மண் அகழ்வும் இயந்திரமான (பக்கோ இயந்திரம்) மூலம் அகழும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இதன் போது வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கல்லடி விசேட அதிரடிப்படை பொறுப்பாளர், கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
அவ்விடத்தில் அகழ்வு பணியை காலை 9 மணி தொடக்கம் பகல் 1.00 மணி வரை மேற்கொண்ட போதும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து அழ்வு பணி நிறுத்தப்பட்டு முடிவுக்கு கொண்டுவந்து அங்கிருந்து விசேட அதிரடிப்படையினர் வெளியேறினர்.
இதேவேளை குறித்த பகுதி கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளதுடன் அங்கு அந்த நேரம் புலிகளின் முகாம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.