ஜெனிவாவில் புலிக்கொடியைக் காட்சிப்படுத்துவதற்கும், புலி ஆதரவாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் இடமளிக்கப்படக்கூடாது என்று ஒற்றையாட்சி மற்றும் இராணுவத்தை பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டாளரும், முன்னாள் கடற்படை அதிகாரியுமான டி.கே.பி. தசநாயக்க வலியுறுத்தினார்.
இது தொடர்பில் கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்திடம் மேற்படி அமைப்பால் அறிக்கையொன்று கையளிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட தசநாயக்க
“ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்றுவருகின்றது. தமிழ் டயஸ்போரா மற்றும் புலி ஆதரவாளர்கள் அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
32 நாடுகளில் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இலங்கையிலும் அவ்வமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, தடை செய்யப்பட்ட அமைப்பின் ஆதரவாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடவும், கொடிகளை காட்சிப்படுத்தவும் இடமளிக்ககூடாது எனக் கோரியுள்ளோம்.
பிரபாகரனின் சிலையை காண்பித்தும், புலிக்கொடியை காட்சிப்படுத்தியும் போராடுவதற்கு தமக்குள்ள உரிமையைக்கோரி பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது. இதனை நிறுத்துமாறும் சுவிட்சர்லாந்திடம் நாம் கோரினோம்.” – எனவும் குறிப்பிட்டுள்ளார்.