ஜேர்மனியின் மூனிச் விமான நிலைய வான்பரப்பில் மர்ம ட்ரோன்கள் பறந்ததையடுத்து விமானப் போக்குவரத்து முற்றாக முடக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் சமீபகாலமாக விமான நிலையங்களின் வான்பரப்பில் மர்ம ட்ரோன்கள் பறப்பதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, டென்மார்க் மற்றும் நோர்வே விமான நிலையங்களில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்ற நிலையில் ரஷ்யாவின் மறைமுகப் போர் தந்திரமாக இருக்கலாம் என சில ஐரோப்பிய தலைவர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
இந்த தொடர் சம்பவங்களை எதிர்கொள்ள ‘ட்ரோன் தடுப்புச் சுவர்’ ஒன்றை அமைப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
ஜேர்மனியின் மூனிச் விமான நிலையத்தில் நேற்று (2) இரவு வான்பரப்பில் மர்ம ட்ரோன்கள் பறப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு உடனடியாக விமான சேவைகளுக்குக் கட்டுப்பாடுகளை விதித்ததையடுத்து விமான நிலையம் முழுமையாக முடக்கப்பட்டது.
இதனால், புறப்படத் தயாராக இருந்த 17 விமானங்கள் தரையிலேயே நிறுத்தப்பட்டன. தரையிறங்க வேண்டிய 15 விமானங்கள், ஸ்டட்கர்ட், நியூரம்பெர்க், வியன்னா உள்ளிட்ட பிற நகரங்களுக்குத் திருப்பி விடப்பட்டன.
இந்த திடீர் முடக்கத்தால் சுமார் 3,000 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விமான நிலையத்தில் இந்த ட்ரோன்களை இயக்கியது யார் என்பது குறித்து ஜேர்மனி அதிகாரிகள் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.