இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கூகுள் க்ளவுட் உடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் இசைக் குழுவை அமைக்க உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான், ‘சீக்ரெட் மவுண்டேன்’ என்ற மெய்நிகர் (virtual) இசைக்குழுவை 2024-ம் ஆண்டு பிப்ரவரியில் அறிமுகப்படுத்தினார். இக்குழுவில் வெவ்வேறு இனங்களையும் கலாச்சாரங்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் ஆறு மெய்நிகர் கலைஞர்கள் இருக்கின்றனர். இவர்கள் முற்றிலும் ஏஐ-யால் உருவாக்கப் பட்ட கதாபாத்திரங்கள். இவர்கள் மூலம் அடுத்ததலைமுறைக்கான பொழுதுபோக்கு நிறைந்த இசை ஆல்பத்தை உருவாக்கும் திட்டத்துக்காக, கூகுள் க்ளவுட் உடன் ஏ.ஆ.ரஹ்மான் இணைந்துள்ளார்.
கூகுள் க்ளவுட் வழங்கும் ஏஐ தொழில்நுட்பமான வியோ 3, இமேஜென், ஜெமினி ஃப்ளாஷ் 2.5, ஜெமினி 2.5 ப்ரோ ஆகியவற்றை இந்தத் திட்டத்தில் பயன்படுத்த இருக்கின்றனர். இசைக் கலைஞர்களும் ஏஐ தொழில்நுட்பமும் இணைந்துபணியாற்றும்போது பார்வையாளர்களை வெகுவாகக் கவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி ஏ.ஆர்.ரஹ்மான் கூறும்போது, “சீக்ரெட் மவுண்டேன்’ என்பது இசை, கதை சொல்லல், தொழில்நுட்பம் ஒன்றிணைந்து புதிய அனுபவங்களை உருவாக்கும் முயற்சி. ஒவ்வொரு பாத்திரத்தின் பின்னாலும் தயாரிப்பாளர்கள், பாடகர்கள், நடனக் கலைஞர்கள், நடன இயக்குநர்கள், நடிகர்கள், வழிகாட்டிகள் என மனித திறமையை கொண்ட குழு உழைக்கிறது. இது கலைக்கு அர்ப்பணிக்கப்பட்ட மனிதர்களின் முழுமையான கொண்டாட்டம்” என்று தெரிவித்துள்ளார்.
hindutamil




