ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் 82 நாடுகளை சேர்ந்த 206 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர். இந்தத் தொடரில் நேற்று 3-வது சுற்றின் 2-வது ஆட்டங்கள் நடைபெற்றன.
இதில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், ஜெர்மனி கிராண்ட் மாஸ்டரான ஃபிரடெரிக் ஸ்வேனுடன் மோதினார். இதில் 55-வது நகர்த்தலின் போது குகேஷ் தோல்வி அடைந்தார்.
இவர்கள் இருவரும் மோதிய முதல் ஆட்டம் டிராவில் முடிவடைந்திருந்தது. இரு ஆட்டங்களின் சராசரியாக ஃபிரடெரிக் ஸ்வேன் 1.5-0.5 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார். நாக் அவுட் போட்டி என்பதால் தோல்வி அடைந்த குகேஷ் தொடரில் இருந்து வெளியேறினார்.
இந்திய கிராண்ட் மாஸ்டர்களான பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, ஹரி கிருஷ்ணா, பிரணவ் ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர். பிரக்ஞானந்தா, அர்மேனியாவின் ராபர்ட் ஹோவன்னிஸ்யனுடன் மோதினார். இதில் பிரக்ஞானந்தா 42-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். அர்ஜூன் எரிகைசி, ஹரி கிருஷ்ணா, பிரணவ் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில் 2-வது ஆட்டங்களை டிராவில் முடித்து 4-வது சுற்றில் கால்பதித்தனர்.
HinduTamil




