“ வடக்கு, கிழக்கில் போதைப்பொருளுக்கு இராணுவம்தான் பிரதான காரணம். எனவே, அங்கிருந்து இராணுவம் எப்போது வெளியேற்றப்படும்.” –
இவ்வாறு தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அமைச்சர் சந்திரசேகரிடம் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் சந்திர சேகர், வடக்கு, கிழக்கின் கல்வி நிலை மற்றும் போதைப்பொருள் மாபியா பற்றி கருத்துகளை வெளியிட்டார்.
இதன்போது எழுந்த கஜேந்திரகுமார் எம்.பி.,
“ வடக்கில் கடந்த ஏழு மாதங்களாக கல்வி நிலை மேம்பட்டுள்ளது என சொன்னீர்கள், இதனை ஆதரப்பூர்வமாக வெளிப்படுத்துங்கள். போதைப்பொருளுக்கு இராணுவம்தான் பிரதான காரணம். இராணுவம் எப்போது வெளியேறும்” என்று கேட்டார்.
இராணுவம் வெளியேற்றம் குறித்து அமைச்சர் நேரடி பதிலை வழங்கவில்லை.
அதேவேளை இராணுவம், பொலிஸ் போதைப்பொருள் விடயத்தில் சம்பந்தப்பட்டிருப்பதை ஒப்புக்கொண்டதை வரவேற்கின்றேன் என்று என்று கஜேந்திரகுமார் எம்.பி. மீண்டும் குறிப்பிட்டார்.இராணுவத்தை பொறுப்புக்கூற வைக்காமல், மாபியாக்களை ஒழிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர்,
” ஒட்டுமொத்த இராணுவம் மற்றும் ஒட்டுமொத்த பொலிஸார்மீது நான் பழிசுமத்தவில்லை. ஓரிருவரை பற்றிதான் குறிப்பிடுகின்றேன்.”என்றார்.
இந்நிலையில்,
வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்துடன் பாதுகாப்பு தரப்பினருக்கு தொடர்புள்ளது என தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆவது வாசிப்புமீதான விவாதத்தில் உரையாற்றும்போதே பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர மேற்படி குற்றச்சாட்டை நிராகரித்தார்.
“ இராணுவம் மற்றும் பொலிஸார் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புபட்டுள்ளனர் என கேஜந்திரகுமார் பொம்மன்பலம் எம்.பி. குறிப்பிட்டார்.
இவ்வாறு நடக்கின்றதெனில் இடங்களின் பெயர், எந்த பொலிஸ் நிலையம் மற்றும் எந்த படைப்பிரிவு போன்ற தகவல்களை முன்வைக்க வேண்டும். அப்போது அது பற்றி தேடி பார்க்கலாம்.
அவ்வாறு இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்பு கிடையாது.” எனவும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.




