வடக்கு மாகாணத்தில் இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள தேசியப் பாதுகாப்புடன் தொடர்புடைய காணிகளை ஒருபோதும் விடுவிக்கக் கூடாது என, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பான குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளால் தேசியப் பாதுகாப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தேசியப் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் பொறுப்பின்றிச் செயற்படுகிறது.
30 ஆண்டுகால போரினால் அனைத்து இன மக்களும் பாதிக்கப்பட்டார்கள். போர் முடிவடைந்து விட்டது என்று குறிப்பிட முடியாது.
எதிர்காலத்தில் போர் ஒன்று தோற்றம் பெறலாம்.ஆகவே அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியம்.
வடக்கு மாகாணம் தேசியப் பாதுகாப்பின் பிரதான கேந்திர மையமாக உள்ளது .
வடக்கில் காணி பிரச்சினை காணப்படுகிறது. தனிப்பட்ட பாதுகாப்பை விட, தேசிய பாதுகாப்பை கருத்திற் கொண்டே காணி விடுவிப்பு குறித்து தீர்மானம் எடுக்க வேண்டும்.
தேசியப் பாதுகாப்புடன் தொடர்புடைய காணிகளை இராணுவத்தினர் வசம் வைத்துக் கொள்ள வேண்டும்.
அவ்வாறான காணிகளை ஒருபோதும் விடுவிக்கக் கூடாது.
பாதுகாப்பு காரணிகளுடன் தொடர்புடைய காணிகளை விடுவிப்பதற்குப் பதிலாக, காணி உரிமையாளர்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அல்லது காணிகளுக்குப் பதிலாக நட்டஈடு வழங்க வேண்டும்.
வடக்கு மாகாணத்தில் மீண்டும் போர் ஒன்று தோற்றம் பெறாத வகையில் , தேசியப் பாதுகாப்புடன் தொடர்புடைய காணிகள் முறையாக அடையாளப்படுத்தப்பட வேண்டும்.
தேசியப் பாதுகாப்புடன் தொடர்புடைய காணிகளை விடுவிக்கவே கூடாது.
வடக்கு மக்களுக்கு அநீதி இழைக்க வேண்டும் என்று நாங்கள் குறிப்பிடவில்லை. காணிக்கு போதுமான அளவு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கூறுகிறேன் .
வடக்கு வாக்குகளைப் பெறுவதற்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்காமல் தேசியப் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி அரசாங்கம் செயற்பட வேண்டும்.
அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் தேசியப் பாதுகாப்பு குறித்து தீர்மானங்களை எடுக்க வேண்டும். அதுதான் நாட்டுக்குத் தேவை என்றும் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.




