இலங்கையில் 269 பேரின் உயிரிழப்புக்கு வழிவகுத்த குண்டுத் தாக்குதல் தொடர்பாக விசாரிக்கப்பட்ட பெயர் குறிப்பிடப்படாத இலங்கையர் ஒருவர் இங்கிலாந்தில் தஞ்சம் கோருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பாக The telegraph செய்திச் சேவை தெரிவித்துள்ளதாவது,
இலங்கையில் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், பெயர் குறிப்பிடப்படாத அந்த புகலிடக் கோரிக்கையாளர் கைது செய்யப்பட்டார்.
இந்த குண்டுவெடிப்புகளில் ஒரு தாய் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் உட்பட ஆறு பிரித்தானிய நாட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
பெயர் குறிப்பிட அனுமதிக்கப்படாத அந்த நபர், ஆடம்பர ஹோட்டல்கள் மற்றும் தேவாலயங்களை குறிவைத்து தற்கொலை குண்டுவெடிப்புகள் நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டில் இலங்கையை விட்டு வெளியேறினார்.
அவர் 2022 செப்டம்பரில் இங்கிலாந்து வந்து ஒரு மாதத்திற்குப் பின்னர் புகலிடம் கோரினார்.
இலங்கையை விட்டு வெளியேறியதிலிருந்து, காவல்துறை அதிகாரிகள் தனது குடும்ப வீட்டிற்குச் சென்று வருவதாகவும், அவர் வீடு திரும்பினால் “துன்புறுத்தலுக்கு அஞ்சுவதாகவும்” குடிவரவு அதிகாரிகளிடம் குற்றச்சாட்டுகளை மறுக்கும் நபர் கூறினார்.
அவரது மனைவிக்கும் அவருக்கும் புகலிடம் கோரிய கோரிக்கை முதலில் உள்துறை அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டது.
ஆனால் அவர் மேல் குடியேற்ற தீர்ப்பாயத்தில் அந்த முடிவுக்கு எதிராக மேல்முறையீட்டில் வெற்றி பெற்றார்.
மேலும் அவரது வழக்கு இப்போது மீண்டும் விசாரிக்கப்படும்.




