ரணில் மீதான வழக்கு – சொலிசிட்டர் ஜெனரலின் கீழ் விசாரணைகள் கண்காணிப்பு

0
35

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பான வழக்கு விசாரணை, மன்றாடியார் நாயகம் விராஜ் தயாரத்னவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க, லண்டன் சென்ற போது அரச நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாகக் குற்றஞ்சுமத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையே இவ்வாறு விராஜ் தயாரத்னவின் பார்வைக்கு வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, லண்டனில் உள்ள வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்கு ரணில் விக்கிரமசிங்க சென்றிருந்தபோது, 16.6 மில்லியன் ரூபா அரச நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சட்ட மா அதிபர், இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வழக்கை, மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரில் நெறிப்படுத்தி வருவதாகவும் ஊடகங்களில் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக லண்டனுக்குச் சென்ற குற்றப் புலனாய்வுத் துறையின் விசாரணை அதிகாரிகளால் பெறப்பட்ட ஆவணங்கள் இதுவரை சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லையெனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here