மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழலில், சர்வதேச சட்ட மீறல்கள் குறித்து இலங்கை தனது நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும் என ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நீண்டகால அணிசேரா வெளியுறவுக் கொள்கை என்பது, பொதுமக்களின் உயிரிழப்புகள் மற்றும் சர்வதேச விதிமீறல்களின் போது மௌனமாக இருப்பதைக் குறிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கை ஒரு நடுநிலையான நாடு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், நடுநிலைமை என்பது மௌனம் காப்பது என்று அர்த்தமல்ல” எனக் குறிப்பிட்ட அவர், பிஞ்சு குழந்தைகள் கொல்லப்படும்போது ஒரு நாடு அமைதியாக இருக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள், ஈரானின் பொதுமக்களின் தனிப்பட்ட சொத்துகள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதாகக் குற்றம் சாட்டிய தூதுவர், போரிடும் தரப்புகளுக்கு இடையே அணிசேராமல் இருப்பதே நடுநிலைமை என்றும், ஆனால் சர்வதேச சட்டங்கள் மீறப்படும்போது அதற்கு அலட்சியமாக இருக்கக் கூடாது என்றும் சுட்டிக்காட்டினார்.




