இலங்கை தமிழ் கலைஞர்களின் நலன் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக விசேட கலந்துரையாடல் திங்கட்கிழமை (30) பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் தமிழ் கலைஞர்களின் நலன்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டதுடன் மிக நீண்ட காலமாக தமிழ் கலைஞர்கள் எதிர்நோக்குகின்ற மிக முக்கியமான பிரச்சினைகளான, தமது கலைப்படைப்புகளை ஒத்திகை பார்ப்பதற்கு அல்லது அவர்களின் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கான ஓர் நிரந்தரமான இடவசதி இல்லாமை, கலைஞர்களின் வாழ்வாதாரம், அவர்களின் வீட்டு வசதிகள், நவீன தொழில்நுட்ப வசதிகள், வருடந்தோறும் தமிழ் கலைஞர்களுக்கான கௌரவிப்புகள் போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
அவர்கள் முன்வைத்த சில கோரிக்கைகளுக்கு அமைச்சர் தீர்வினை பெற்றுக் கொடுத்திருந்ததோடு மேலும் ஒரு சில பிரச்சனைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு கலந்துரையாடி அதற்கான தீர்வினை பெற்றுக் கொடுப்பதாகவும் அமைச்சர் உறுதியளித்தார்.
இக்கலந்துரையாடலில் தமிழ் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் கலைமாமணி பொன்.பத்மநாதன் உட்பட மூத்த கலைஞர்கள் பலரும் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




