கண்ணீருடன் உலகக் கோப்பைக்கு விடை கொடுத்த ரொனால்டோ…ஆறுதல் சொன்ன லமின் யமால்

0
3
Thinakaran FB

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிக்கு முந்தைய (ரவுண்ட் ஆப் 16) ஆட்டத்தில் போர்ச்சுகலை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், காலிறுதிக்கு முன்னேறியது. இந்த தோல்வியுடன் போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கோப்பை பயணமும் நிறைவுக்கு வந்தது.

மிக்கேல் மெரினோ கோல்

இந்திய நேரடிப்படி இரவு 12.30 மணிக்கு டெக்சாஸில் உள்ள டல்லாஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் இரு அணிகளும் தொடக்கம் முதல் கடுமையாக போராடிய நிலையில், முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இரண்டாம் பாதியிலும் கடைசி நிமிடங்கள் வரை எந்த கோலும் பதிவாகவில்லை. அப்போது ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் ஸ்பெயின் அணியில் மாற்று வீரராக களமிறங்கிய மிக்கேல் மெரினோ கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

மைதானத்திலேயே கண்ணீர்

2006-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் முதன்முறையாக களமிறங்கிய ரொனால்டோ, இந்த தொடரே தனது கடைசி உலகக் கோப்பை என்று போட்டிக்கு முன்பே அறிவித்திருந்தார். அதனால், இப்போட்டியில் இறுதி விசில் ஒலித்ததும் உலகக் கோப்பை கனவு முடிவுக்கு வந்ததை உணர்ந்த அவர், மைதானத்திலேயே கண்ணீரை அடக்க முடியாமல் உணர்ச்சிவசப்பட்டார்.

மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி ரொனால்டோவுக்கு மரியாதை செலுத்தினர். ஸ்பெயின் அணியின் லமின் யமால் அவரை அணைத்து பிடித்து ஆறுதல் கூறிய காட்சிகள் ரசிகர்களை நெகிழ செய்தன.

காலிறுதி

இதனிடையே, 2010-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் உலகக் கோப்பையை வென்ற பிறகு, முதல் முறையாக உலகக் கோப்பை காலிறுதிக்கு முன்னேறிய ஸ்பெயின், வருகிற வெள்ளிக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை எதிர்கொள்ள உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here