தலவாக்கலையிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் முன்பகுதி சில்லில் சிக்கி 60 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.21.07.2018 அன்று மாலை 4.15 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பஸ்ஸின் சாரதி அட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
தலவாக்கலையிலிருந்து அட்டன் பஸ் தரிப்பு நிலையத்திற்கு வருகை தந்த குறித்த பஸ் அட்டன் பஸ் தரிப்பு நிலையத்தில் நிறுத்த முற்பட்ட போது குறித்த நபர் பஸ்ஸில் அகப்பட்டுள்ளார்.
மேற்படி நபர் பொகவந்தலாவ பகுதியை நோக்கி பயணிப்பதற்காக பாதையை கடக்க முற்பட்டபோதே இவ்விபத்து நேர்ந்துள்ளது.
காயம்பட்டவர் பொகவந்தலாவ லொய்னோன் பகுதியை சேர்ந்த 60 வயதுடையவர் என அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
க.கிஷாந்தன் , மு.இராமச்சந்திரன்