தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் மெதகும்புர பகுதியில் வீதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதனால் அவ்வீதியினூடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த மண்சரிவு 24.11.2018 அன்று அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.பூண்டுலோயா பிரதான வீதியில் மண்மேடு மற்றும் கற்கள் சரிந்து விழுந்துள்ளதனால் இதனை சீர் செய்வதற்கு பூண்டுலோயா பொலிஸாரும், வீதி அபிவிருத்தி அதிகார சபையினரும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
தலவாக்கலையிலிருந்து பூண்டுலோயா செல்பவர்கள் மெதம்கும்புர வீதியினை மாற்று வழியாக பயன்படுத்தலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையால் வீதிகளில் மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்படுவதனால் வாகனங்களை வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செலுத்த வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
க.கிஷாந்தன்