எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் பொது சேவையை நவீனமயமாக்குதல் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களை வலுப்படுத்துதல் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
மொனராகலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி திசாநாயக்க இதனைக் கூறினார்.
2025 ஆம் ஆண்டில் மொனராகலை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி மீளாய்வு செய்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் திறைசேரி நிதி, கிராம திட்டங்களுக்கு முறையாக சென்றடைவதை உறுதி செய்வதற்காக கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
இந்தத் திட்டங்களில் ஏற்படும் தாமதங்களைத் தடுக்க, அதிகாரிகள் நிறைவு பெறும் திகதி வரை இலக்கு வைக்கப்பட்ட திட்டத்தை கண்காணிக்க வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மாவட்டத்தில் விவசாய சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முறையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் என்று ஜனாதிபதி ஊடக பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.