ரஷ்யா – இந்தியா – சீனா இடையிலான முத்தரப்பு உறவை புதுப்பிக்கும் முன்னெடுப்பை ரஷ்யா எடுத்துள்ளது. மூன்று நாடுகளுக்கு இடையிலான இந்த நட்புறவுக்கு முழு ஆதரவு அளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் போர், உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால், அமெரிக்காவை சமாளிக்க, ரஷ்யாவுடன் சீனா நெருக்கம் காட்டி வருகிறது. மேலும் பழைய கசப்புணர்வுகளை மறந்து இந்தியாவுடனும் நட்பு பாராட்டுவதற்கான தருணத்தை சீனா எதிர்பார்த்துள்ளது.
அதற்கேற்ப கடந்த 2002ல் நிறுவப்பட்ட ஆர்.ஐ.சி.எனப்படும் ரஷ்யா- இந்தியா- சீனா முத்தரப்பு மன்றத்திற்கு புத்துயிர் அளிக்க, ரஷ்யா முனைப்பு காட்டி வருகிறது.
இந்நிலையில் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோரிடையே கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதையடுத்து முடங்கியிருந்த மூன்று நாடுகளின் ஆர்.ஐ.சி. முத்தரப்பு உறவுக்கு புத்துயிர் அளிப்பதற்கான பேச்சுகள் மீண்டும் தொடங்கி உள்ளன.
அமெரிக்காவை எதிர்ப்பதற்கு இந்தியா, ரஷ்யாவின் உதவி தேவை என்பதால், முத்தரப்பு உறவை புதுப்பிக்கும் முயற்சிக்கு சீனாவும் தற்போது முழு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.