அமேசான் காடுகள் அழிப்பு – எதிராக குரல் எழுப்பிய 2,253 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மர்மமான முறையில் மரணம்!

0
5

அமேசான் காடுகள் அழிப்புக்கு எதிராக குரல் எழுப்பிய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் 2,253 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தென் அமெரிக்க கண்டத்தின் சுமார் 70 லட்சம் சதுர கி.மீ., பரப்பளவில் அமேசான் காடுகள் பரந்து விரிந்து காணப்படுகிறது.

உலக நாடுகளில் உள்ள மொத்த காடுகளையும் ஒன்று சேர்த்தாலும், அதைவிட அமேசான் காடுகளின் பரப்பளவு மிகவும் அதிகம். இங்குள்ள மொத்தம் 39 ஆயிரம் கோடி மரங்கள் மூலமாக, ஆண்டுக்கு 60 ஆயிரம் கோடி டன் ஆக்சிஜன் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாகவே அமேசான் காடுகள், ‘பூமியின் நுரையீரல்’ என்று அழைக்கப்படுகிறது.

10 ஆயிரத்திற்கும் அதிகமான உயிரினங்களுக்கும், பழங்குடி இனத்தவர்களுக்கும் புகலிடமாக உள்ளது.

பிரேசில், பெரு, பொலிவியா, கொலம்பியா, வெனிசூலா, கயானா, ஈகுவடார், சுரினாம், பிரெஞ்ச் கயானா ஆகிய 9 நாடுகளில் இந்த அமேசான் காடுகள் பரந்து கிடக்கிறது. புவி வெப்பமயமாதலை தடுப்பதில் பெரும் வரமாக இருக்கும் இந்த அமேசான் காடுகள், மனித பேராசை காரணமாக அழிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.

அமேசான் காடுகளை பாதுகாக்க வலியுறுத்தி உலகம் முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மனித – இயற்கை இடர்பாடுகள், இயற்கை பேரழிவுகள் தொடர்பாக உலக அளவில் ஆய்வு செய்யும் லண்டனைச் சேர்ந்த குளோபல் விட்னஸ் என்ற ஆய்வு நிறுவனம், பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது, கடந்த 12 ஆண்டுகளில் அமேசான் காடுகள் அழிப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் 2,253 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக, எஸ்காசு ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டதில் இருந்து லத்தின் அமெரிக்காவில் மட்டும் சுமார் 1,000 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

குளோபல் விட்னஸ் நிறுவனத்தின் அறிக்கையின்படி, கடந்த 2012ம் ஆண்டு முதல் 2024 வரையில் அதிகபட்சமாக பிரேசிலில் 365 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அடுத்ததாக, கொலம்பியாவில் 250 பேரும், பெருவில் 225 பேரும் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கடந்த 2024ல் 142 பேர் மரணமடைந்துள்ளதாகவும், அதில், 82 சதவீதம் லத்தின் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, கடந்த 3 ஆண்டுகளாக கொலம்பியாவில் தான் அதிகபட்சமாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2023ம் ஆண்டில் 79 பேர் கொல்லப்பட்ட நிலையில், 2024ல் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.

நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் சட்டப்பூர்வ கடுமையான நடவடிக்கைகள் மூலம் கிராமப்புற மற்றும் பழங்குடி சமூகங்களின் உரிமைகளை பாதுகாக்கும் அரசுகளுக்கு குளோபல் விட்னஸ் அழைப்பு விடுத்துள்ளது. அதுமட்டுமில்லாமல், மனித உரிமை மீறல்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வலுவான சட்டங்களை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here