இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரசாங்க சேவையைக் கட்டியெழுப்ப சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் மனசாட்சிக்கு இணங்கச் சரியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் பற்றி விசாரிக்கும் ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் நாயகம் தனுஷா பண்டார தெரிவித்தார்.
இலங்கையின் ஊழலுக்கு எதிரான தேசிய செயற்றிட்டம் 2025-2029 இற்கு அமைய பாராளுமன்றத்தில் அமைக்கப்பட உள்ள உள்ளக அலுவல்கள் பிரிவின் வகிபாகம் மற்றும் அதனால் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படும் விடயங்கள் குறித்து பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் பணியாட்தொகுதியினரை விழிப்புணர்வூட்டும் நோக்கில் பாராளுமன்றத்தில் நேற்று (16) இடம்பெற்ற செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி தலைமையில் அண்மையில் வெளியிடப்பட்ட இலங்கையின் ஊழலுக்கு எதிரான தேசிய செயல்திட்டம் 2025-2029 இற்கு உட்பட்டதாக ஜனாதிபதி செயலகத்தினால் அரசாங்க நிறுவனங்களில் உள்ளக அலுவல்கள் பிரிவொன்றை அமைப்பது தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டிருப்பதுடன், இதற்கு அமைய குறித்த பிரிவை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இலஞ்சம் அல்லது ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகள் குறித்து விளக்கமளித்த அவர், ஊழல், இலஞ்சம் மற்றும் சட்டவிரோதமாகச் சொத்துக்களைக் குவித்தல் மற்றும் அக்கறைகளில் முரண்பாடு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் பற்றி விசாரிக்கும் ஆணைக்குழுவிற்குக் காணப்படும் அதிகாரங்கள் பற்றி எடுத்துக் கூறினார்.
பாராளுமன்றத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள உள்ளக அலுவல்கள் பிரிவின் தலைவராக பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன பணியாற்றுவதுடன், நேர்மை அதிகாரியாக உள்ளகக் கணக்காய்வாளர் தினேஷ் விதான அவர்கள் பணியாற்றுகின்றார்.
இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் ஆணையாளர் சட்டத்தரணி ஜகத் லியனாராச்சி இங்கு உரையாற்றுகையில், அரசாங்க சேவையில் ஊழலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல இலங்கையும் வளர்ச்சியடையச் செய்ய முடியும் என்று தெரிவித்தார். மேலும், இந்த உள்ளக அலுவல்கள் பிரிவு அரசாங்க அதிகாரிகளின் நேர்மையை உறுதி செய்வதிலும், இலஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத திறமையான அரசாங்க சேவையை உறுதிப்படுத்துவதில் முக்கிய பங்குவகிக்க முடியும் என்றும் கூறினார்.
இந்த செயல்முறையை முறையாக செயல்படுத்துவதற்கு பொருத்தமான சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் மட்டும் போதாது என்றும், அதன் சரியான செயல்பாட்டை உறுதி செய்வதற்கு அனைவருக்கும் பொதுவான பொறுப்பு உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
பாராளுமன்றத்தின் உள்ளக அலுவல்கள் பிரிவின் மூலம் கௌரவமான பாராளுமன்றத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சட்டத்தரணி சமிந்த குலரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் சகல திணைக்களங்களின் தலைவர்கள், சகல திணைங்களங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இந்தச் செயலமர்வில் கலந்துகொண்டனர்.