பிரதமர் நரேந்திர மோடியை சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். அப்போது இந்தியா, சிங்கப்பூர் இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் 3 நாட்கள் பயணமாக டெல்லி வந்துள்ளார். அவருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், நிதித் துறை அமைச்சர் ஜெப்ரி, வர்த்தக துறை அமைச்சர் கான் சியோ {ஹவாங் ஆகியோரும் இந்தியா வந்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று அவர் சந்தித்து பேசினார். அப்போது இந்தியா, சிங்கப்பூர் இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
குறிப்பாக சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத கப்பல் போக்குவரத்து, விமான போக்குவரத்து பயிற்சி, செமி கண்டக்டர் உள்ளிட்ட துறைகளில் திறன்சார் பயிற்சி, செயற்கைக்கோள் தகவல் பரிமாற்றம், வங்கி, முதலீடு சார்ந்த தகவல் பரிமாற்றம் ஆகியவை தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
இதன்பிறகு இரு தலைவர்களும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட பிரதமர் மோடி,
‘தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக சிங்கப்பூர் விளங்குகிறது. பாதுகாப்பு துறையில் இரு நாடுகள் இடையிலான உறவு வலுவடைந்து வருகிறது.
பசுமை கப்பல் போக்குவரத்து, திறன் மேம்பாடு, சிவில் அணு சக்தி, நகர்ப்புற நீர் மேலாண்மை, செமி கண்டக்டர் உற்பத்தி, தொழில்நுட்பம், புதுமை கண்டுபிடிப்பு, செயற்கை நுண்ணறிவு, குவாண்டம், டிஜிட்டல் தொழில்நுட்பம், விண்வெளி ஆகிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.” – என்று குறிப்பிட்டார்.
இந்திய, பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதில் இந்தியாவும் சிங்கப்பூரும் இணைந்து செயல்படும். சிங்கப்பூர் மற்றும் ஆசியான் கூட்டமைப்புடன் ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும். சர்வதேச தீவிரவாதத்துக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து செயல்படும். பஹல்காம் தாக்குதலை கண்டித்த சிங்கப்பூர் அரசுக்கு மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.