இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் முடிவு!

0
23

10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 20 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 5 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகள் வருகிற 15-ந்தேதி கொழும்பில் மோதும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே 20 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியாவுடனான போட்டியை மட்டும் புறக்கணிக்கப் போவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தானை ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) எச்சரித்திருந்தது. ஆனாலும் பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது.வங்காளதேசத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்ததாக அந்நாட்டு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.

இதற்கிடையே இந்தியாவுடன் விளையாட மறுக்கும் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானுடன் ஐ.சி.சி. பேச்சுவார்த்தை நடத்தியது.ஐ.சி.சி. துணைத் தலைவர் இம்ரான் குவாஜா, அசோசியேட் உறுப்பினர் இயக்குநரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட்டின் பொதுச் செயலாளருமான முபாஷிர் உஸ்மானி ஆகியோர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோசின் நக்வியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.மேலும் வங்காளதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாமும் மோசின் நக்வியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

எனினும், பாகிஸ்தான் அரசின் முடிவே இறுதியானது என்றும் ஐ.சி.சி.-யிடம் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்து இருந்தது. இதனால் இந்தியாவுடனான போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்குமா என்பதில் இழுபறி நீடித்து வந்த நிலையில், இது தொடர்பான முடிவை நேற்று இரவு பாகிஸ்தான் எடுத்துள்ளது. இதன்படி, இந்தியாவுக்கு எதிராக நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. நட்பு நாடுகளின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here