“இயக்குநராக வருவதுதான் என் கனவு”… ரவி மோகன் நெகிழ்ச்சி பேச்சு

0
4
dailythanthi

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி மோகன், ஜெயம், தனி ஒருவன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான பராசக்தி திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அவர், தனது மிரட்டலான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

தற்போது ரவி மோகன், கராத்தே பாபு, பென்ஸ், ப்ரோ கோட் உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில், தனது நீண்டநாள் கனவை நனவாக்கும் வகையில் ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்ற புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.

யோகி பாபுவை வைத்து இயக்கும் ‘ஆன் ஆர்டினரி மேன்’

தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படைப்பாக ‘ஆன் ஆர்டினரி மேன்’ என்ற திரைப்படத்தை ரவி மோகன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்து வருவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது சினிமா பயணம் மற்றும் இயக்குநராக அறிமுகமாகும் அனுபவம் குறித்து ரவி மோகன் மனம் திறந்து பேசியுள்ளார்.

சிறுவயது கனவு நனவான தருணம்
நடிகர் ரவி மோகன், யோகி பாபுவை கதாநாயகனாக வைத்து இயக்கும் தனது புதிய படம் தொடங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இறைவன் அருளால், யோகி பாபுவை வைத்து நான் இயக்கவிருக்கும் படம் இறுதியாகத் தொடங்கியுள்ளது. சிறுவயது முதலே சினிமா துறைக்குள் நுழைய வேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது” என்றார்.

தற்செயலாக ஒரு நடிகரானேன்
மேலும் பேசிய அவர், “அப்போது நான் இயக்குநராக வருவேனா, நடிகராக மாறுவேனா அல்லது எடிட்டராக வருவேனா என்பது எனக்கே தெரியவில்லை. அதனால் திரைப்படத் தயாரிப்பின் அனைத்து நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டேன். எனது ஆர்வம் எப்போதும் இயக்கத்தின் மீதுதான் இருந்தது. நடிப்பை யாரும் கற்றுக்கொடுக்க முடியாது. அது அனுபவத்தின் மூலமே வரும். அதனால் நான் தற்செயலாக ஒரு நடிகரானேன். ஒரு நடிகனாக என் பயணம் தொடங்கி, அது மிகச் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது.தற்போது இயக்குநராக மாறுவது எனக்கு புதிய மற்றும் உற்சாகமான அனுபவமாக உள்ளது. இந்தப் பயணத்திற்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன் ” என்று தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here