இலங்கை ஆடவர் மற்றும் மகளிர் அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களின் அதிரடி துடுப்பாட்ட (பவர்-ஹிட்டிங்) திறன்களை வளர்க்;கும் நோக்கில் நிபுணத்துவ அறிவு கொண்ட பயிற்சியாளரான ஜூலியன் வுட், இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு விசேட பயிற்சியை வழங்கவுள்ளார்.
ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 5 வரை நடைபெறும் இந்தப் பயிற்சித் திட்டத்தில், கிரிக்கெட் விளையாட்டின் தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப உத்திகளை இணைத்து பந்தை அடிக்கும் நுட்பம் மேம்படுத்தப்படும். குறைந்த பந்துகளில் அதிக ஓட்டங்கள் பெறுவதும், பந்தை அடிக்கும்போது மைதானத்தில் முடிந்தவரை தூரத்திற்கு பந்தை மேலே அனுப்புவதும் இந்தப் பயிற்சித் திட்டத்தின் அடிப்படை நோக்கங்களாகும்.
துடுப்பாட்ட வீரர்களின் ஆற்றல்மிக்க அடித்தல் திறன்களை மேம்படுத்துவதற்காக ஜூலியன் வுட் தேசிய அணியின் பயிற்சியாளர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவார் என இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பரில் இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள மகளிர் உலகக்கிண்ண தொடர் மற்றும் 2026 ரி20 உலகக் கிண்ணத் தொடரை இலக்காகக் கொண்டு இந்த பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.