இலங்கையில் வாழும் சமீபத்திய இந்திய வம்சாவளி மலையக மக்கள், காணி உரிமை, வீட்டு உரிமை, வறுமை, சிசு மரணம், சுகாதாரம், தொழில் நிலைமைகள் உள்ளிட்ட அனைத்திலும் மிகவும் குறை வளர்ச்சி கொண்ட மக்களாக வாழ்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் உடனான கலந்துரையாடலின் போது நாடாளுமன்ற உறுப்பினர் இதனைக் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர் இலங்கைக்கு வருகை தந்த ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் டொமொயா ஒபொகடா, பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் அறிக்கையொன்றைத் தயாரித்து மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வில் சமர்ப்பித்திருந்தார்.
இந்த அறிக்கையைக் கவனத்திற் கொள்ளுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் உயர்ஸ்தானிகரிடம் கேட்டுக் கொண்டார்.
இலங்கையைப் பற்றி அறிக்கை சமர்ப்பிக்கையில் வட, கிழக்குக்கு வெளியே வாழும் மலையக மக்கள் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டுக் கொண்டார்.
மலையக மக்கள் இன்னமும் முழுமையான குடி மக்களாக இந்நாட்டில் வாழாமல் இரண்டாம் தர பிரஜைகளாகவே வாழ்கிறார்கள்.
காணி உரிமை உட்பட உரிமைகள் உரித்தாகும் போதுதான், அவர்களது குடியுரிமை முழுமையடையும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.