இயலாமையுடைய நபர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்களுக்கு உணர்வூட்டும் நோக்கில் “தடையற்ற சமூக வாழ்வு ஒன்றை நோக்கி” என்ற தொனிப்பொருளில் செயலமர்வொன்று பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டது.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுதத் வசந்த சில்வா அவர்களைத் தலைமையாகக் கொண்ட இயலாமையுள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் இந்தச் செயலமர்வை அண்மையில் (18) பாராளுமன்றத்தில் ஏற்பாடு செய்திருந்தது.
இதில் பல்வேறு இயலாமையுடைய நபர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்களின் சார்பில் பிரதிநிதிகள் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர். தாம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து அவர்கள் விளக்கமளித்தனர்.
சட்டங்களை உருவாக்கும் இடத்திலுள்ள மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் உணர்திறனை ஏற்படுத்துவதன் மூலம் தேவையான மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என நம்புவதாக இயலாமையுள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுதத் வசந்த சில்வா தெரிவித்தார். சுதந்திரமான சமூக வாழ்க்கையை உருவாக்க பாராளுமன்றத்தின் ஊடாக கொள்கைகளை உருவாக்க வேண்டும். இந்த சமூகத்தைப் பற்றியும் அக்கறையுடனும் சிந்திக்க வேண்டியது பாராளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பாகும். அதற்கான முயற்சியாக இடம்பெற்ற விழிப்புணர்வுத் திட்டம் வெற்றிகரமாக அமைந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்(வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் ஆளும் கட்சி எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.