கொச்சியில் ஐ.டி ஊழியரை கடத்தி தாக்கியதாக நடிகை லட்சுமி மேனன் மற்றும் மூன்று பேர் மீது எர்ணாகுளம் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் போலீஸாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்ஜாமீன் கேட்டு நடிகை லட்சுமி மேனன் தரப்பில் கேரள உயர் நீதிமன்றத்தை நாடினார்.
இதை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற நீதிபதி பெச்சுகுரியன் தாமஸ், வரும் செப்டம்பர் 17-ம் தேதி வரை லட்சுமி மேனனை கைது செய்ய கூடாது என நேற்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தார். இந்த மனு மீதான விசாரணை மீண்டும் அன்றைய தினம் விசாரிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
லட்சுமி மேனன் மீதான புகார் என்ன? – கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் கொச்சியில் உள்ள ஒரு பாரில் லட்சுமி மேனன் தரப்புக்கும், ஆலுவாவைச் சேர்ந்த ஐடி ஊழியர் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அன்று இரவு எர்ணாகுளம் வடக்கு ரயில்வே மேம்பாலத்தில், லட்சுமி மேனன் உடன் வந்தவர்கள் ஐ.டி ஊழியரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.