ஒருவர், ‘ஐ லவ் யூ’ எனக்கூறுவது உணர்வுகளின் வெளிப்பாடே தவிர, பாலியல் நோக்கமாக இருக்காது’ எனக் குறிப்பிட்ட மும்பை உயர் நீதிமன்றம் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கைதான, 35 வயது நபரை விடுவித்துள்ளது.
மஹராஷ்டிராவின் நாக்பூரை சேர்ந்த, 17 வயது சிறுமி, 2015ல் பாடசாலையில் இருந்து வீடு திரும்புகையில், 35 வயது நபர் ஒருவர், அச்சிறுமியை இடைமறித்து, அவரது கையை பிடித்து, ‘ஐ லவ் யூ’ என தெரிவித்தார்.
இதை தன் தந்தையிடம் சிறுமி தெரிவித்தார். அவர் அளித்த புகாரின் பேரில், அந்நபரின் மீது போக்சோ சட்டத்தின்கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய நாக்பூர் செஷன்ஸ் நீதிமன்றம், அந்நபருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, பாதிக்கப்பட்ட நபர் மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையின் மேல்முறையீடு செய்தார். இது, நீதிபதி ஊர்மிளா ஜோஷி பால்கே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (01) தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன் விபரம்:
‘ஐ லவ் யூ’ என்ற வார்த்தையை, பாலியல் நோக்கத்துடன் அணுகக்கூடாது. இந்த வார்த்தையின் உண்மையான நோக்கம் குறித்து ஆராய வேண்டும். இது, பாலியல் வன்கொடுமை அல்லது பாலியல் துன்புறுத்தலின் கீழ் குற்றச்செயலாக கருத முடியாது.
பாலியல் சீண்டல், வலுகட்டாயமாக ஆடைகளை களைவது, அநாகரிகமான சைகைகள் அல்லது ஒரு பெண்ணை அவமதிக்கும் வகையில் ஆபாச கருத்துகளை பேசுவது ஆகியவை பாலியல் குற்றங்களாக கருதப்படும்.
ஆனால், இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர், பாலியல் நோக்கத்துடன், ‘ஐ லவ் யூ’ எனக்கூறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே, செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.