கனடாவின் பிராம்ப்டன் (Brampton) நகரில் உள்ள சிங்குஸகூசி பூங்காவில் (Chinguacousy Park) அமைந்துள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபி (Tamil Genocide Memorial) அமைந்துள்ளது.
இதில் இழிவான வாசகங்கள் அடங்கிய வண்ணம் பூசி சேதமாக்கிய குற்றச்சாட்டில் 14 வயது சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மார்ச் 20 அன்று இந்த அவமதிப்புச் சம்பவம் நடந்ததாகப் பீல் பிராந்திய பொலிஸார் (Peel Regional Police) தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தை ஒரு வெறுப்புணர்ச்சியால் தூண்டப்பட்ட குற்றமாக (Hate crime) வகைப்படுத்தியுள்ள பொலிசார், விசேட விசாரணைப் பிரிவின் மூலம் தீவிர விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இதன் விளைவாக, மார்ச் 31 ஆம் திகதி கைது செய்யப்பட்ட பிராம்ப்டனைச் சேர்ந்த சிறுவனுக்கு 5,000 டொலருக்கும் அதிகமான பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்த இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பதின்ம வயது சிறுவன் என்பதால் கனடிய சட்டப்படி சிறுவனின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
“சமூகங்களுக்கு மிக முக்கியமான இடங்களில் இத்தகைய வெறுப்புணர்ச்சிக் குற்றங்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது” எனப் பொலிஸ் தலைமை அதிகாரி நிஷான் துரையப்பா (Nishan Duraiappah) வன்மையாகக் கண்டித்துள்ளார்.
பொது இடங்களில் மக்கள் பாதுகாப்பாக உணர வேண்டியது அவர்களின் உரிமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பீல் பொலிசார் அண்மையில் இத்தகைய இனவெறி மற்றும் கலாச்சார ரீதியான தாக்குதல்களைக் கையாள பிரத்யேகப் பிரிவு ஒன்றையும் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




