லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுக்கலை தோட்டத்தில் சட்ட விரோதமான முறையில் மதுபானங்களை பௌர்ணமி தினமான இன்று (10) விற்பனை செய்யவிருந்த ஒருவரை நேற்று (09) மாலை கைதுசெய்துள்ளதாக நுவரெலியா மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தோட்ட பொது மக்கள் மூலம் நுவரெலியா மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து லிந்துலை மட்டுக்கலை தோட்டத்தில் திடீர் பரிசோதனையொன்றை மேற்கொண்டபோது அனுமதி பத்திரமின்றி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 30 மதுபான போத்தல்களும் 96 கள்ளு போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளது.
மட்டுக்கலை தோட்டத்தில் நீண்ட நாட்களாக மது விற்பனை செய்து வந்த 30 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரையும், அவரிடம் இருந்து மீட்க்கப்பட்ட மதுபான போத்தல்களையும் பறிமுதல் செய்து லிந்துலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சந்தோகநபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு பின்னர் அவரை நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.