ஹட்டன் நகருக்கு சிங்கமலை குளத்து நீரை பெற்றுக் கொள்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் நாளொன்றிற்கு பயனாளர்களுக்கான நீர் விநியோகம் இரண்டு மணித்தியாலங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் நீர் விநியோக சபை பொறுப்பதிகாரி லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹட்டன் நகருக்கு விநியோகிக்கப்படும் நீர் சிங்கமலை குளத்தில் இருந்து. பெறப்படுகிறது. இந் நிலையில் 17 வயதுடைய மாணவன் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த நிலையில் சடலமாக, செவ்வாய்க்கிழமை (08) மீட்கப்பட்டார்.
இதனையடுத்து குறித்த குளத்தில் இருந்து நகர விநியோகத்திற்கு நீர் எடுப்பதை ஹட்டன் நீர் விநியோக அதிகாரசபை நிறுத்தியிருந்தது.
அம்பகமுவ பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய அதிகாரிகள் , பொது சுகாதார அதிகாரி சௌந்தரராகவன் மற்றும் ஹட்டன் நீர் விநியோக அதிகார சபை அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் கள ஆய்விற்காக சிங்கமலை குளத்துக்கு வியாழக்கிழமை (10) சென்றனர்.
இதையடுத்து சிங்கமலை ஆற்றின் மாதிரி நீர் பகுப்பாய்விற்கு எடுத்து செல்லபட்டதுடன் ஆய்வறிக்கை கிடைக்கப்பெற்ற பின்னர் மேலதிக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஹட்டன் நகர் நீர் விநியோக அதிகாரசபை பொறுப்பதிகாரி லால் விஜேநாயக்க தெரிவித்தார்.
அதுவரை காலமும் ஹட்டன் நகரிற்கு 08 மணித்தியாலங்கள் விநியோகிக்கப்பட்ட நீர் விநியோகம் இரண்டு மணித்தியாலம் குறைக்கப்பட்டு ஆறு மணித்தியாலங்கள் நீர் விநியோகம் செய்யப்படும் எனவும் அறிக்கைகள் கிடைக்கும் வரை சிங்கமலை குளத்தில் இருந்து ஹட்டன் நகருக்கு நீர் பெற்றுக்கொள்ளப்படாது எனவும் தெரிவித்தார்.