நாட்டின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பாராளுமன்ற வாக்கெடுப்பில் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு விரைவாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்வை வழங்கி நாட்டை மீட்டெடுப்பார் என்பதுடன், மக்கள் தமது இயல்பு வாழ்க்கையை நெருக்கடிகளின்றி கொண்டுசெல்லவும் தற்போதைய வாழ்க்கை செலவை குறைக்கவும் ஜனாதிபதி விரைவாக நடவடிக்கையெடுப்பார் எனவும் அவர் கூறினார்.
ரணில் விக்கிரமசிங்கவை நாட்டின் ஜனாதிபதியாக தெரிவுசெய்ய பாராளுமன்றத்தில் வாக்களித்த அனைத்து எம்.பிகளுக்கு நன்றியை தெரிவிப்பதுடன், நாட்டின் எதிர்காலம் மற்றும் தொலைநோக்கு கொள்கையை கொண்டுள்ள ஒரு சரியான ஜனாதிபதி பல தசாப்தங்களின் பின்னர் தற்போதுதான் உருவாகியுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் ஐ.தே.கவுக்கு மூன்று இலட்சம்வரையான வாக்குகளை மாத்திரம் வழங்கி மக்கள் வரலாற்று பிழையை செய்திருந்தனர். ஆனால், மீண்டும் அவர் அறியாணை ஏறியுள்ளார். மக்களை இவர்மீது முழுமையான நம்பிக்கையை கொள்ளுமாறு கோருகிறேன்.
இன்று நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வை வழங்கக் கூடிய ஒரே தவைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே. அவரது அரசியல் அனுபவம் மற்றும் பொருளாதாரத்தை கையாளும் அனுபவங்களின் ஊடாக மாத்திரமே நாட்டை வழமைக்கு கொண்டுவர முடியும். மீண்டும் இலங்கையை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் ஒரு நாடாக ஜனாதிபதி ரணில் மாற்றியமைப்பார் எனவும் அவர் கூறியுள்ளார்.




