‘டியூட்’ படத்தில் இளையராஜாவின் பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியிருப்பது தொடர்பாக, தனியாக வழக்கு தொடரலாம் என இளையராஜாவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
பதிப்புரிமை பெற்ற தனது பாடல்களைப் பயன்படுத்தி தனிப்பட்ட முறையில் அதிக வருவாய் ஈட்டி வருவதாகக் கூறி சோனி மியூசிக், எக்கோ ரெக்கார்டிங், அமெரிக்காவில் உள்ள ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், இளையராஜா இசையமைத்த பாடல்களை வணிக ரீதியாக பயன்படுத்தி ஈட்டிய வருமானம் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய, சோனி நிறுவனத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.சரவணன், இந்த வழக்கில் சோனி நிறுவனம் இன்னும் பதில்மனு தாக்கல் செய்யவில்லை என்றும், தற்போது வெளியாகியுள்ள ‘டியூட்’ படத்திலும் இளையராஜாவின் 2 பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தி உள்ளனர் என்றும் கூறினார்.
சோனி நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், இளையராஜாவின் பாடல்கள் மூலம் ஈட்டிய வருவாய் குறித்த விவரங்களை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் இளையராஜாவின் 500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு பதிப்புரிமை பெற்றது தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து மும்பைக்கு மாற்றக்கோருவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சோனி நிறுவனம் தொடர்ந்த வழக்கில், இளையராஜா பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.செந்தில்குமார், வருமானம் குறித்த விவரங்களை சீலிட்ட கவரில் தாக்கல் செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளதாகக்கூறி சோனி நிறுவனம் தாக்கல் செய்த வருமான விவரங்களைத் திருப்பிக் கொடுத்தார். மேலும், ‘டியூட்’ படத்தில் தனது பாடல்களைப் பயன்படுத்தியிருப்பது தொடர்பாக இளையராஜா தனியாக வழக்கு தொடரலாம் என அனுமதி யளித்தார். மேலும் சோனி நிறுவனம் தொடர்ந்துள்ள வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகக்கூறி, இந்த வழக்கு விசாரணையை நவ.19-க்கு தள்ளி வைத்துள்ளார்.
HinduTmail