தேசபந்துவின் துர்நடத்தை தொடர்பில் 28 பேர் சாட்சியமளிப்பு – மேலும் இருவரிடம் ஜூன் 26 சாட்சிப் பதிவு!

0
5

பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழு மேலும் 7 சாட்சியாளர்களின் சாட்சியங்களைப் பெறுவதற்கு இன்று (19) கூடியது. உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி. சூரசேன அவர்களின் தலைமையில் மற்றும் நீதிபதி டபிள்யூ.எம்.என்.பி. இத்தவல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஈ.டபிள்யூ.எம் லலித் ஏக்கநாயக்க ஆகியோர் உள்ளடங்கிய குழு கடந்த திங்கட்கிழமை முதல் தொடர்ந்து நான்காவது நாளாக இவ்வாறு இன்றும் கூடியது.

அதற்கமைய, இன்று சாட்சி வழங்கிய 7 சாட்சியாளர்கள் உள்ளிட்ட வாதி சார்பில் 28 சாட்சியாளர்கள் குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு வருகை தந்துள்ளதுடன், வாதி சார்பில் மேலும் 2 சாட்சியாளர்களிடம் ஜூன் 26 ஆம் திகதியின் பின்னர் சாட்சிகள் பெற்றுக்கொள்ளவதற்கு விசாரணைக்குழுவின் அனுமதி வழங்கப்பட்டது. இந்த 2 சாட்சியாளர்களும் உத்தியோகபூர்வ பணிக்காக வெளிநாடு சென்றுள்ளதாகவும் ஜூன் 26 ஆம் திகதி மீண்டும் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி விசாரணையில் பங்கெடுத்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் (ஜனாதிபதி சட்டத்தரணி) திலீப பீரிஸ் மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரஜித பெரேரா ஆகியோர் குழுவில் சுட்டிக்காட்டினர். அதற்கமைய பிரதிவாதியான பொலிஸ்மா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஆர்.எஸ். வீரவிக்ரமவின் இணக்கத்துடன், 26 ஆம் திகதிக்கு பின்னர் இந்த 2 சாட்சியாளர்களிடம் சாட்சிகளைப் பெறுவதற்கும் குறுக்கு விசாரணைகளை மேற்கொள்வதற்கும் குழு முன்னிலையில் அழைப்பதற்கு விசாரணைக்குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.

விசாரணைக்குழு நாளைய தினமும் தொடர்ந்தும் கூடுவதற்கு திட்டமிட்டிருந்தாலும், பிரதிவாதியின் வழக்கு விசாரணைக்கு தயாராக வேண்டி உள்ளதால் பிரதிவாதியான பொலிஸ்மா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஆர்.எஸ். வீரவிக்ரம 23 ஆம் திகதி வரை கால அவகாசம் தருமாறு கோரிக்கை விடுத்தார்.

இதன்போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகளின் இணக்கத்துடன் அதற்கு விசாரணைக்குழு அனுமதி வழங்கியது. அதற்கமைய, விசரணைக்குழு 23 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் கூடவுள்ளதுடன், அன்றைய தினம் முதல் 25 ஆம் திகதி புதன்கிழமை வரை ஒவ்வொருநாளும் மு.ப. 9.30 மணிக்கு, பிரதிவாதியான பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் சார்பில் சாட்சியாளர்களிடம் சாட்சியங்களைப் பெற்றுக்கொள்வதற்கு விசாரணைக்குழு முன்னிலையில் அழைக்கப்படவுள்ளனர். அத்துடன், இந்த மூன்று தினங்களில் பிரதிவாதியான பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் சார்பில் சாட்சியளிப்பதற்கு 15 சாட்சியாளர்கள் வருகை தரவுள்ளதாகவும் விசாரணைக்குழு அறிவித்தது. இந்த சாட்சிகளை அடுத்து 26 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் பி.ப. 2.00 மணிக்கு விசாரணைக்குழு மீண்டும் கூடுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here